தென்னிந்திய சினிமா

ஊரடங்கில் 17,000 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு உதவுதற்காக ‘தேவரகொண்டா அறக்கட்டளை’யைத் தொடங்கினார் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை 17,000 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளாக தேவரகொண்டா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேவரகொண்டா அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''விஜய் தேவரகொண்டாவின் இந்த அறக்கட்டளை மூலம் இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் நிவாரண உதவியாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும் 8,505 தன்னார்வத் தொண்டர்கள் தங்களை இதில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.

அறக்கட்டளையில் எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT