தென்னிந்திய சினிமா

தொடரும் கிண்டல்? - இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய ப்ரியா பிரகாஷ் வாரியர்

செய்திப்பிரிவு

2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரே காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

அதன் மூலம் சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன. பாலிவுட் நடிகர்களைப் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 72 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலிருந்து ப்ரியா பிரகாஷ் வாரியர் வெளியேறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டல்களும், வசைகளும் அதிகரித்து வந்ததே அவர் வெளியேறியதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், தான் இன்ஸ்டாவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து அவர் அதிகாரபூர்வ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் அவர் இன்னும் ஃபேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் நீடித்து வருகிறார்.

ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஸ்ரீதேவி பங்களா’ திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் கதையை மாற்றக் கோரி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT