உடல்நலக் குறைவு காரணமாக பிரபல மலையாள நடிகர் சசி கலிங்கா மரணமடைந்தார். அவருக்கு வயது 59.
ஆதமிண்டே மகன் அபு, இந்தியன் ருப்பீ, ஆமென் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் சசி கலிங்கா. வி.சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு வெளியான ‘கேரளா கஃபே’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மம்மூட்டி நடித்த ‘ப்ரான்ச்சியேட்டன் அண்ட் தி செய்ண்ட்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
கடந்த சில தினங்களாகவே கல்லீரலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சசி கலிங்கா கோழிகோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சசி கலிங்கா மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.