பெண் மருத்துவர் கொலைக் குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதற்கு காவல் துறையினருக்குத் திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.
பெண் மருத்துவர் மரணம் தொடர்பாக பல்வேறு பிரபலங்கள், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தூக்கிலிட வேண்டும் என்று கருத்துகள் தெரிவித்து வந்தார்கள். இதனிடையே, இன்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல்துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்கள் வெளியிட்டுள்ள ட்வீட்களின் தொகுப்பு
நாகார்ஜுனா: இன்று காலை செய்தியைப் பார்த்தேன். நீதி வழங்கப்பட்டுள்ளது!
ஜுனியர் என்.டி.ஆர்: நீதி வென்றுள்ளது! இப்போது உன் ஆன்மா சாந்தி அடையட்டும் திஷா.
ரகுல் ப்ரீத் சிங்: பாலியல் வன்கொடுமை போன்ற ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு எவ்வளவு தூரம் உங்களால் ஓடமுடியும்... நன்றி தெலங்கானா போலீஸ்.
ஷாலினி பாண்டே: வரலாற்றில் நினைவுகூர வேண்டிய நாள். தெலங்கானா போலீஸ் மற்றும் தெலங்கானா அரசால் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.
கார்த்திக் சுப்புராஜ்: உண்மை சுடும். அவர்கள் இதற்குத் தகுதியானவர்கள் தான்!!
கல்யாண்ராம்: துக்கத்தில் இருக்கும் குடும்பத்தின் வலியை எதைக் கொண்டும் அழிக்க முடியாது. ஆனால், இது சற்று ஆறுதலை அளிக்கும் என்று நம்புகிறேன். நீதி வென்றுள்ளது. உன் ஆன்மா சாந்தி அடையட்டும் திஷா!
ராஜசேகர்: நீதி வென்றுள்ளது. நமது முதல்வருக்கும், நமது காவல்துறைக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறோம். உன் ஆன்மா சாந்தி அடையட்டும் திஷா!
பிரசன்னா: ஹைதராபாத் காவல்துறைக்கு நன்றி.
சமந்தா: நான் தெலங்கானாவை நேசிக்கிறேன். பயம் ஒரு மிகப்பெரிய தீர்வு சில நேரங்களின் அது மட்டுமே தீர்வு.
அல்லு அர்ஜுன்: நீதி வென்றது.
விஷால்: இறுதியில் நீதி வென்றது. தெலங்கானா காவல் துறையினருக்கு நன்றி.
ஹன்சிகா: நீதி வென்றது.
ராஷி கண்ணா: ஹைதராபாத் காவல் துறையினருக்கு சல்யூட். நீதி வென்றது.