தென்னிந்திய சினிமா

சமரசம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்பார்கள்: நடிகை காயத்ரி சுரேஷ் அதிரடி

ஸ்கிரீனன்

வாய்ப்புகளுக்காக சமரசம் செய்து கொள்ள முடியுமா என்று தன்னிடம் சிலர் கேட்டிருப்பதாக நடிகை காயத்ரி சுரேஷ் கூறியுள்ளார்.

ஒரு மெக்சிகன் அப்ரதா, சகாவு உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர் காயத்ரி சுரேஷ். தமிழில் ஜிவி பிரகாஷுடன் 4ஜி படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சில்ட்ரென்ஸ் பார்க் என்ற படம் சம்பந்தப்பட்ட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் பேசுகையில், "வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ள முடியுமா என்று எனக்கும் பல செய்திகள் வரும் ஆனால் அதற்கெல்லாம் நான் பதில் அனுப்பியதே இல்லை. இது போன்ற செய்திகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பதுதான் மேற்கொண்டு உரையாடலைத் தடுக்கும். அதனால் நான் இப்படிப் பேசுபவர் எவருக்குமே பதில் அனுப்பியதில்லை" என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.

மலையாள திரை உலகில் நடிகைகள் சேர்ந்து, அவர்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும், WCC என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது போல வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகைகளிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் பற்றி பல நடிகைகள் சாடியுள்ளனர்ர். காயத்ரியின் இந்த பேச்சு குறித்து இதுவரை மலையாள திரையுலகில் யாரும் கருத்து கூறவில்லை.

SCROLL FOR NEXT