தென்னிந்திய சினிமா

ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்படும் சாஹோ

செய்திப்பிரிவு

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சாஹோ' திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி' படம் மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார் நடிகர் பிரபாஸ். எனவே இவர் தற்போது நடித்து வரும் 'சாஹோ' படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடாக, தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. சுஜீத் என்பவர் படத்தை இயக்குகிறார்.

'பாகுபலி 2' திரைப்படம் ஜப்பானில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், சாஹோவை ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் வெளியான ஒரு சில வாரங்கள் கழித்தே ஜப்பானில் வெளியாகும். படத்தை விளம்பரம் செய்ய பிரபாஸ் ஜப்பான் பயணப்படுவார் என்றும் தெரிகிறது.

'சாஹோ' இந்தியாவின் மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக இருக்கும் என படத்தில் வில்லனாக நடிக்கும் நீல் நிதின் முகேஷ் குறிப்பிட்டுள்ளார். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது 'சாஹோ'.

ஷ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் மேலும் அருண் விஜய், மந்திரா பேடி, லால், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஷங்கர்-எஹ்சான்-லாய் கூட்டணி இசையமைக்க மதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT