துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீதாராமம்’ படத்தை இயக்கியவர் ஹனு ராகவபுடி. இவர், அடுத்து இயக்கும் ‘ஃபவுஸி’ என்ற படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, இயான்வி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் பிரபாஸ் போர்வீரனாக நடிக்கிறார். இந்த பான்-இந்தியா படத்தின் டைட்டில் லுக் அக்டோபரில் வெளியானது.
இந்நிலையில் இந்தப் படம் 2 பாகங்களாக உருவாகிறது என இயக்குநர் ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார். "இந்த படத்தில் பிரபாஸின் கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள உலகம் முதல் பாகத்தின் வலுவாக இருக்கும். 2-ம் பாகத்தில் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் கதை செல்லும். பிரிட்டிஷ் காலனித் துவ காலத்திலிருந்து நமக்கு அதிக கதைகள் கிடைக்கின்றன.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரமும் தன்னம்பிக்கையும் இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். மறக்கப்பட்ட ஹீரோக்களின் கதைகளை உற்சாகமான முறையில் காண்பிக்கும் நோக்கத்துடன் இது உருவாகிறது. அந்த வீரர்களின் சில கதைகள் துயரமாக முடிந்திருக்கலாம், ஆனால் அவர்களை பாசிட்டிவாக காட்ட முயன்றிருக்கிறேன். என்னைத் தனிப்பட்ட முறையில் பாதித்த சில அனுபவங்களையும் இப்படத்தின் கதையில் சேர்த்திருக்கிறேன்" என்றார்.
முன்னதாக, ‘கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்?’ என்ற சிந்தனை தான் இந்தக் கதையின் மையக் கரு என்று கூறியிருந்தார், ஹனு ராகவபுடி.