தென்னிந்திய சினிமா

ராஜமவுலி இயக்கும் படத்துக்காக ரூ.50 கோடியில் வாரணாசி செட்!

செய்திப்பிரிவு

‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். நிஜ வாரணாசியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.50 கோடி செலவில் இந்த செட் அமைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு கென்யாவில் நடத்தப்பட இருக்கிறது. அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.

SCROLL FOR NEXT