நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. 3டி-யில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட ஃபேன்டஸி படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், பின்னணி இசை அமைத்துள்ளார்.
நாளை (டிச.25) வெளியாகும் இந்தப் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் மோகன்லால் கூறும்போது, “திரைத்துறையில் 47 வருடமாக இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம் இது. ஃபேன்டஸி, அட்வென்சர் படம். முழுவதும் 3டி-யில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம் பிடித்துள்ளோம். இதில் முக்கியமான, திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து 2 நடிகர்கள்தான் இதில் நடித்துள்ளனர். மற்றவர்கள் போர்ச்சுக்கல், ஸ்பெயின், ரஷ்ய நடிகர்கள் ஆவர். பிரிட்டீஷ் குழந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. ஒரு மேஜிக் உலகுக்கு இந்தப்படம் அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை இந்தப் படம் உசுப்பிவிடும்” என்றார்.