தென்னிந்திய சினிமா

‘தி ராஜா சாப்’ வதந்தி: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

ஸ்டார்க்கர்

‘கல்கி 2898 ஏடி’ படத்துக்குப் பிறகு, பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘தி ராஜா சாப்’. இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பில் பிரபாஸுக்கு காயம் ஏற்பட்டுவிட்டதால் அவர் ஓய்வில் இருக்கிறார் என தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸுக்கு டீசர் வெளியாகும் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாக வாய்ப்பில்லை எனவும் செய்திகள் வெளியாகின. இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து ‘தி ராஜா சாப்’ படத்தினை தயாரித்து வரும் பீப்பில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தி ராஜா சாப் படப்பிடிப்பு இரவு பகலாக தொடர்ச்சியாக வேகமாக நடந்து வருகிறது. கிட்டதட்ட 80% படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு டீசர் வெளியீடு குறித்து பல்வேறு வதந்திகள் பரவுவதை கவனித்தோம். இந்த பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். எந்த அறிவிப்பையும் சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் பதிவுடன் #TheRajaSaabonApril10th என்ற ஹேஷ்டேகையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வெளியீட்டுத் தேதியில் மாற்றமில்லை என்பது உறுதியாகிறது.

மாருதி இயக்கி வரும் இப்படத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹாரர் படமாக இது உருவாகி வருகிறது. இதற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

SCROLL FOR NEXT