சிவராஜ் குமார் (கோப்புப் படம்) 
தென்னிந்திய சினிமா

“ஆம், நான் சிகிச்சையில்தான் இருக்கிறேன்” - சிவராஜ் குமார் பகிர்வு

செய்திப்பிரிவு

பெங்களூரு: “உடல் நல பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள போகிறேன்” என கன்னட நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ள ‘பைரதி ரணகல்’ (Bhairathi Ranagal) கன்னட திரைப்படம் வரும் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே சிவராஜ் குமார் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான சூழலில், படத்தின் புரொமோஷனுக்கான நேர்காணலில் தனது உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார் சிவராஜ்குமார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நானும் மனிதன்தான். எனக்கும் உடல் நல பிரச்சினைகள் உண்டு. அதற்காக நான் சிகிச்சை பெற்று வருகிறேன்.

இரண்டு சிகிச்சை அமர்வுகள் முடிந்துவிட்டன. இன்னும் சில அமர்வுகள் உள்ளன. அந்த சிகிச்சை முடிந்த பின் அடுத்த கட்டமாக இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறேன். அதன் பிறகு ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் திரைத் துறைக்கு திரும்புவேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “எனக்கு இருக்கும் உடல் நல பிரச்சினையை அறிந்துகொண்டபோது முதலில் பதற்றதமாகத் தான் இருந்தது. ஆனால், அது தொடர்பாக மக்களையும் பததற்றப்படுத்த வேண்டாம் என்று வெளியில் சொல்லவில்லை. பின்னர் இதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைத்துக் கொண்டேன். இப்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது. கவலைப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பது குறித்து வெளிப்படையாக சிவராஜ்குமார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT