தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து, ‘மாயவன்’ படத்தில் நடித்தார். இப்போது அதர்வா ஜோடியாக ‘தணல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் லாவண்யா, இளம் ஹீரோ வருண் தேஜை காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இருவரும் ‘அந்தாரிக்ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாயின. இதை லாவண்யா மறுத்திருந்தார்.
இந்நிலையில் நாளை லாவண்யா திரிபாதி - வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், நாளை ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் மிக பிரமாண்டமாக நடக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. திருமண நிச்சயதார்த்தம் குறித்த அழைப்பிதலும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. நடிகர் வருண் தேஜ், சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 'மிஸ்டர்' மற்றும் 'அந்தரிக்ஷம்' ஆகிய படங்களில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் பாராட்டை பெற்ற நிலையில் தற்போது இருவரும் இல்லற வாழ்க்கையில் இணையவிருக்கின்றனர்.