2020-ம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, நெட்ஃபிளிக்ஸில் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 3 மாதங்களில் 1 கோடி சந்தாதாரர்கள் என்பது வழக்கமாக நெட்ஃப்ளிக்ஸில் இணையும் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
கரோனா நெருக்கடி காரணமாக உலக அளவில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ள வேளையில், தொலைக்காட்சி, கணிப்பொறியைத் தாண்டி ஸ்ட்ரீமிங் தளங்களின் மூலம் புதிய திரைப்படங்கள், தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நெட்ஃப்ளிக்ஸுக்கு சாதகமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நெட்ஃப்ளிக்ஸில் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். ஜூன் மாதம் முடிவில் உலக அளவில் நெட்ஃப்ளிக்ஸுக்கு சந்தா செலுத்தியுள்ளவர்கள் எண்ணிக்கை 19.3 கோடி என்ற அளவில் உள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்கள். நெட்ஃப்ளிக்ஸின் மிகப்பெரிய சந்தையாக இந்த இரண்டு நாடுகளும் உள்ளன.
மேலும் இந்த மொத்த சந்தாதாரர்களில் 2.6 கோடி பேர், இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இணைந்தவர்கள். இது கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் இருந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும். ஆனால், கரோனா நெருக்கடி ஆரம்பத்தின்போது இந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் இருந்த வேகம் இப்போது குறைந்துள்ளது என்று நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஊரடங்குப் பிரச்சினைகள் முடிந்து சகஜ நிலை திரும்பினாலும் கூட, சர்வதேச அளவில் ஸ்ட்ரீமிங் சேவையைப் பெறும் சந்தாதாரர்கள் மூன்றில் ஒரு பங்கு நெட்ஃப்ளிக்ஸிடமே இருப்பார்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
மார்ச் 11-ம் தேதி ஆரம்பித்து இன்றுவரை நெட்ஃப்ளிக்ஸின் பங்குகள் மதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.