அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலானது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் தற்போது உருவெடுத்துள்ளது.
உலகையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து ஹாரி பாட்டர் படங்களின் மூலம் பிரபலமான நடிகை எம்மா வாட்ஸன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நமது கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் நிறவெறி அதிகமாக இருந்து வருகிறது. அவை ஒப்புக்கொள்ளப்படவுமில்லை, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவுமில்லை.
சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் படிநிலைகளில் வெள்ளை ஆதிக்கமும் ஒன்று. அது சமுதாயத்துடன் மிகவும் இறுக்கமாக ஒன்றிப் போயுள்ளது.
தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் நிறவெறிக்கு எதிரானவர்களாக மாற போராடி வருகிறோம். நம்மை சுற்றி இருக்கும் நிறவெறியை ஒழிக்க நாம் இன்னும் கடுமையான முறையில் உழைக்க வேண்டும். நம்மையே அறியாமல் ஆதரவு கொடுக்கும் இந்த நிறவெறி முறையை பற்றி பலவழிகளில் படித்து வருகிறேன்.
இவ்வாறு எம்மா வாட்ஸட் கூறியுள்ளார்.