மனிதர்களின் மறுபிறவிப் படங்களை மட்டுமே பார்த்து ரசித்த நீங்கள், ஒரு விலங்கின் மறுபிறவிப் படத்தைப் பார்க்கத் தயாரா? ‘ஏ டாக்ஸ் பர்ப்பஸ்’ என்ற ஹாலிவுட் படம் ஒரு நாயின் மறுபிறப்பு பற்றிச் சொல்ல வருகிறது.
எதான் என்ற சிறுவன் ஒரு நாயைக் கொண்டு வந்து வளர்க்கிறான். அந்த நாயை அவனுடைய பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் வீட்டின் பின்புறம் அதற்காகக் குடில் அமைத்து அதற்குப் பெய்லி என்று பெயரிட்டு அழைக்கிறான். நாயும் சிறுவனும் ஒருவரையொருவர் பிரிந்து செல்ல முடியாத அளவுக்கு நெருக்கமாகிறார்கள். சிறுவன் கொஞ்சம் பெரியவனானதும் கல்லூரிப் படிப்புக்காக நாயைப் பிரிந்து செல்கிறான். அந்தப் பிரிவில் நாய் நோய்வாய்ப்பட்டு இறக்கிறது.
பிறகு அந்த நாய் ஜெர்மன் ஷெப்பர்டு பெண் நாயாகப் பிறக்கிறது. எல்லி என்ற பெயரில் வளரும் அந்த நாய் போலீஸ் நாயாக இருக்கிறது. அப்புறம் தண்ணீரில் விழுபவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. அங்கேயும் குண்டடிபட்டு இறந்துபோகிறது நாய். திரும்பவும் அந்த நாய் மறுபிறப்பு எடுக்கிறது. இப்படி மறுபிறப்பு எடுக்கும் நாய் கடைசியில் என்னாகிறது என்பதுதான் ‘ஏ டாக்ஸ் பர்ப்பஸ்’ படத்தின் கதை. நாய்க்கும் மனிதர்களுக்குமான ஆத்மார்த்தமான நெருக்கத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் புரூஸ் கேமரூன் எழுதி அதிக அளவில் விற்பனையான ‘ஏ டாக்ஸ் பர்ப்பஸ்’ நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை லாஸ் ஹால்ஸ்ட்ராம் இயக்கியிருக்கிறார். ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம், பல்வேறு நாடுகளில் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இந்தியாவில் மார்ச் 31 அன்று திரைக்கு வருகிறது. நாயைக் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக நேசிக்கும் யாரும் இந்தப் படத்தைப் பார்ப்பது என்று இந்நேரம் முடிவெடுத்திருப்பீர்கள்.