‘வாரணாசி’ படம் ரசிகர்களுக்கு கண்டம் விட்டு கண்டம் பயணிக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் என்று இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் ‘வாரணாசி’ படம் குறித்து அதன் இயக்குநர் ராஜமவுலி அளித்த பேட்டி ஒன்றில், “‘வாரணாசி படத்தின் பயணம், அந்த புனித நகரத்தில் தொடங்கி அண்டார்டிகாவுக்கு செல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, பிறகு பழங்கால ரோம் நகரத்துக்கு பயணிக்கும் படம் இறுதியில் வாரணாசியிலேயே நிறைவு பெறுகிறது.
படத்தின் டீசரை நாங்கள் வெளியிட்டிருந்தோம். படத்துக்கு நியாயம் செய்வதற்காக அதில் அதிக விஷயங்களை சொல்லவில்லை.
’ஆர்ஆர்ஆர்’ படம் முடிந்து 2022-ல் ‘வாரணாசி’ படப்பிடிப்பைத் தொடங்கினோம். சுமார் நான்கரை வருடங்களாகிவிட்டது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. மீதமிருக்கும் 20 சதவீத படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் உள்ள பெரிய ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் முடிந்துவிட்டன. இடையில் வரும் சிறிய காட்சிகள்தான் எடுக்கப்பட வேண்டும். அந்தக் காட்சிகள் ஹைதராபாத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘வாரணாசி’ படம் முழுவதும் ஐமேக்ஸில் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில படமாக இல்லாமல் ஐமேக்ஸில் எடுக்கப்பட்ட முதல் வேற்று மொழி படம் ‘வாரணாசி’ தான்” என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
‘வாரணாசி’ படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.