பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மான் வேட்டை வழக்குத் திரைப்படமாக உருவாகிறது.
‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக, சல்மான் கான், சைஃப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு சென்றனர். ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் அரிய வகை மான்களில் இரண்டை சல்மான் கான் வேட்டையாடியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
இவ்வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய இச்சம்பவத்தின் பின்னணியில் ‘காலா ஹிரன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை ‘ஆல்ஃ பாலாஜிக்ஸ் ஓடிடி மீடியா’ நிறுவனம் சார்பில் திலீப் குமார் ராய் தயாரிக்கிறார்.
அவர் கூறும்போது, “இந்தப்படம் யாருக்கும் ஆதரவாகவோ, அல்லது புண்படுத்தும் நோக்கத்திலோ எடுக்கப்படவில்லை. இது பல வருடங்களாக ஊடகங்களிலும் நீதிமன்றங்களிலும் பேசப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் உண்மையான பக்கங்களை, மக்களுக்குக் காட்டும் முயற்சி” என்று தெரிவித்துள்ளார். இந்த வேட்டை விவகாரத்தால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்தப்படம் குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.