பாலிவுட்

பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்

ப்ரியா

மும்பை: ‘கஜினி’, ‘வீரம்’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக காலமானார். அவருக்கு வயது 74.

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர் சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டு வந்திருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 4) மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ராவத்தின் மறைவு குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

1952-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமனாக நடித்துத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.

'லகான்' படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்துத் தமிழ், இந்தி திரையுலகில் பெரும் புகழ்பெற்றார்.

பின்னர் அஜித் நடித்த ‘வீரம்’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிப் படங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT