எந்த விளம்பரமும் இல்லாமல் ரூ.2 கோடியில் உருவான ஆன்மிகத் திரைப்படமான ‘ஹனுமன் அன்ஸ்’, ரூ.309 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப் படுத்தியுள்ளது. வட இந்திய சித்தரான நீம் கரோலி பாபா என்ற மகாராஜ் ஜியின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘ஹனுமன் அன்ஸ்’. ஷோபினாவ் சத்யா, சந்தன் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை விஷால் சதுர்வேதி இயக்கியுள்ளார்.
ராகிணி, நம்ரதா ஜி.சிங், அனுப்பிரியா ஏ நாகர் ஆகிய 3 பெண்கள் தயாரித்துள்ளனர். இப்படம் நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. பக்தி,அற்புதங்கள் மற்றும் ஆன்மிகத்தின் மூலம் நம்பிக்கையைப் பெறுவது போன்ற உணர்வுகளை முன் வைக்கும் படம் இது.
தன் தாயை இழந்து வாடும் லட்சுமி நாராயணன் (நீம் கரோலி பாபாவின் இயற்பெயர்) என்ற சிறுவன் தன் தாயைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகிறார். ராமபிரானால் மட்டுமே தன்னையும் தனது தாயையும் மீண்டும் இணைக்க முடியும் என்று நம்பி கோயில்கள், காடுகள், நதிகள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பயணம் செய்கிறார். ஹனுமன் சாலிசா மூலம் ஈர்க்கப்பட்ட அவர், ஹனுமன் வழியாக ராமரை அடைய வேண்டும் என்று ஆன்மிகப் பயணத்தைத் தொடங்குகிறார்.
பல ஆண்டுகள் நீடித்த இந்தப் பயணத்தில் அமைதி, தியானம் மற்றும் பக்தியைக் கற்றுக்கொண்டு, உலகப் பற்றுகளைப் படிப்படியாக விடத் தொடங்குகிறார். பல ஆன்மிகத் துறவிகளைச் சந்திக்கிறார். கடவுள், சேவை செய்வதில்தான் இருக்கிறார் என்பதை உணரும் அவர், பசியால் வாடுவோருக்கு உணவளித்து, அனைவரையும் நிபந்தனையின்றி நேசிக்கிறார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கி ‘ஹனுமன் அன்ஸ்’ மற்றும் நீம் கரோலி பாபாவாக எப்படி உருவெடுக்கிறார் என்பது படத்தின் கதை.
இமயமலையின் கைஞ்சி மலையில் இருந்தவாறே இந்த பாபா உலக பிரபலங்களையும் ஈர்த்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த பாபாவின் ஆசியால்தான் உயர்ந்தேன் என்று கூறியிருப்பதை அறிந்த, மும்பையைச் சேர்ந்த 21 வயது அனுப்பிரியா, இப்படத்தில் தானும் ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இங்கிலாந்தில் பொருளாதாரம் பயின்றுவந்த இவர், ஆப்பிள் நிறுவனத்தின் பொருளாதாரப் பாடத் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த போது, நீம் கரோலி பாபா பற்றி தெரிய வந்திருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ், லாரி பிரில்லியன்ட் போன்ற பிரபலங்கள், பாபாவால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதைப் படித்ததும் அவரைப் பற்றி நண்பர்களிடம் கேட்டபோது, யாருக்கும் தெரியவில்லை. அவர் வாழ்க்கையை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க, புத்தகம் எழுதலாம் என்று நினைத்தார். அப்போது அவருக்கு சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்தது.
விசா பெற இந்தியா திரும்பிய அவர், எதேச்சையாக ‘ஹனுமன் அன்ஸ்’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த விஷால் சதுர்வேதியைச் சந்தித்தார். அவர் தந்த 120 பக்க திரைக்கதையை ஒரே இரவில் படித்தவர், இங்கிலாந்தில் பகுதிநேர வேலை மூலமாக தான் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தையும் இப்படத்துக்காகக் கொடுத்தார். அதை வைத்துதான் இப்படம் முழுமை பெற்றுள்ளது.
இதுபற்றி அனுப்பிரியா கூறும்போது, ‘‘3 பெண்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். அவர்களில் நான்தான் இளையவள். படப்பிடிப்பு முடிந்த பிறகு, அடுத்தகட்டப் பணிகளை முடிக்கத் தேவையான பணம் இல்லாத நிலையில், அந்தப் படத்துடன் எனக்கு வலுவான, உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருந்ததால், எனது முழு சேமிப்பையும் முதலீடு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஆக.7-ல் வெளியானது. வெளியான முதல் வாரம் கூட்டமே இல்லை. 2-வது வாரமும் கூட்டம் வராததால் படத்தைத் திரையரங்குகளில் இருந்து எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிறகு வாய் மொழியாகப் படம் பற்றிய செய்திகள் பரவி வசூல் குவிக்க ஆரம்பித்தது. எந்த விளம்பரமும் இன்றி வெளியான இப்படம் இப்போது உலகளவில் ரூ.309.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
2026-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படங்களின் பட்டியலில் 3-வது இடத்தை இப்படம் பெற்றுள்ளது. “இந்த வெற்றி மகாராஜ் ஜியின் அதிசயம் அன்றி வேறில்லை” என்று அனுப்ரியா நாகர் தெரிவித்துள்ளார்.