பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், பர்ஹான் அக்தரின் ‘டான் 3’ படத்தில் நடிக்க இருந்தார். படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடைசிக் கட்டத்தில் அவர் அப்படத்தில் இருந்து விலகினார்.
‘துரந்தர்’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் அவர் ‘டான் 3’ படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது. அவர் விலகியதால் ரூ.45 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் பர்ஹான் அக்தர், மேற்கிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பில் புகார் அளித்தார். அக்கூட்டமைப்பு, ரன்வீர் சிங் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று அறிவித்தது.
இது பரபரப்பானதை அடுத்து, திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு ரன்வீர் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் கில்டு, இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்புகள் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தின. இதனால் ரன்வீர் சிங் மீதான தடையை உடனடியாக மேற்கிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு திரும்பப் பெற்றுள்ளது.
இவ்வமைப்பின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “இந்த விஷயத்தில் யாரும் ஜெயிக்கவும் இல்லை, தோற்கவும் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வண்ணம், ஒன்றாகப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டு” என்று தெரிவித்துள்ளார்.