இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ள ‘ஹோம்பவுண்ட்’ படத்தை நீரஜ் கேவான் இயக்கியுள்ளார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜான்வி கபூர், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தனது நாவலைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டது என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பூஜா சாங்கோய்வாலா என்பவர் தர்மா புரொடக் ஷன்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
2021-ம் ஆண்டு தான் எழுதிய இதே பெயரிலான நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் எனது நாவலின் காட்சிகள், உரையாடல், கதை அமைப்பு உள்ளிட்ட பல சம்பவங்களை அப்படியே எடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹோம்பவுண்ட் திரைப்படம் பஷாரத் பீரின் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்று தயாரான படம் அது. அதற்கான அனைத்து உரிமைகளும் சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வந்திருக்கும் நோட்டீஸுக்கு, தர்மா புரொடக் ஷன்ஸின் சட்டக் குழு முறையாகப் பதிலளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.