ஆஷா போஸ்லே

 
பாலிவுட்

பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை

ப்ரியா

இந்திய திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஏப்ரல் 11) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆஷா போஸ்லேவுக்கு, இன்று இரவு 7.30 மணியளவில் திடீரென மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

          

பாடகி ஆஷா போஸ்லேவுக்கு நுரையீரல் தொடர்பான சிக்கல்களும்உள்ளதாகத் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆஷா போஸ்லேவின் பேத்தி  ஜானாய் போஸ்லே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது பாட்டி ஆஷா போஸ்லே, கடுமையான உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விரைவில் அவர் நலம்பெறுவார் என்று நம்புகிறோம். இது குறித்த நேர்மறையான தகவல்களைத் தொடர்ந்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தச் சூழலில் தங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய இசையுலகில் கோலோச்சி வரும் ஆஷா போஸ்லே, பத்ம விபூஷன் மற்றும் தாதாசாஹேப் பால்கே விருதுகளைப் பெற்றவர். இவர் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆவார்.

'சுரா லியா ஹை', 'தில் சீஸ் க்யா ஹை' போன்ற ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர். தமிழிலும் ‘செண்பகமே’, ‘செப்டம்பர் மாதம்’ உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று திரைத்துறையினரும், உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT