லண்டன்: பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் தேவ் ஆனந்தின் மகனும், நடிகருமான சுனில் ஆனந்த் லண்டனில் மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 70.
இத்தகவலை தேவ் ஆனந்தின் பேத்தியும், சுனில் ஆனந்தின் மருமகளுமான ஜீனா நரங் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுனில் ஆனந்தின் மறைவால் எங்கள் குடும்பம் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தச் கடினமான காலகட்டத்தில் நீங்கள் அளிக்கும் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரமான சூழலில் எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
1984-ஆம் ஆண்டு தனது தந்தை தேவ் ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'ஆனந்த் அவ்ர் ஆனந்த்' திரைப்படத்தின் மூலம் சுனில் ஆனந்த் இந்தியில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'கார் தீஃப்' மற்றும் 'மை தேரே லியே' ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் நடிப்புத் துறையிலிருந்து விலகி, தனது தந்தையின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான நவ்கேதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை கவனித்து வந்தார். 2011-ஆம் ஆண்டு தேவ் ஆனந்த் மறைந்த நிலையில், தற்போது அவரது ஒரே மகனான சுனில் ஆனந்தும் காலமாகியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.