மும்பை: ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் உலகம் முழுவதும் 25 நாட்களில் ரூ.425 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன்முகர்ஜி உள்ளிட்டோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டது. ஷாருக்கான், அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு ப்ரித்தம் இசையமைத்திருந்தார். சுமார் ரூ.410 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. உலக அளவில் 8,913 திரைகளில் படம் வெளியானது. இந்தியாவை பொறுத்தவரை 5,019 திரைகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
கடந்த 9ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் ரூ.75 கோடியை ஈட்டியது. 12-ம் தேதி வரை உலக அளவில் ரூ.225 கோடியையும், ஒருவாரத்தில் ரூ.300 கோடியையும் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் கரண் ஜோஹர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், உலகம் முழுக்க 'பிரம்மாஸ்திரா' ரூ.425 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் இந்தாண்டு வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் பிரம்மாஸ்திரா என்பது குறிப்பிடத்தக்கது.