'மோசமான இந்திப் படங்களில் நடிப்பதிலிருந்து என்னை காப்பாற்றுவது தென்னிந்திய படங்கள் தான்' என நடிகர் சோனுசூட் தெரிவித்துள்ளார்.
தமிழில் 'சந்திரமுகி' 'ஒஸ்தி' படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் நடிகர் சோனு சூட். பாலிவுட் நடிகரான இவர், தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தவிர, சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டு வருகிறார். தற்போது 'சாம்ராட் பிருத்விராஜ்' என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், ''எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் பரவாயில்லை.
அந்த கதைகளில் என் கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தான் கவனம் செலுத்துவேன். மோசமான இந்திப் படங்களில் நடிப்பதில் இருந்து தென்னிந்திய படங்கள்தான் என்னைக் காப்பாற்றுகின்றன. கரோனா காலகட்டத்தில் நான் செய்த உதவிகளுக்குப் பிறகு எனக்கு பாசிட்டிவ் கேரக்டர்களே வருகின்றன. ஒரு நெகட்டிவ் கேரக்டர் கூட வரவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
நெகட்டிவாக நடித்த படம் ஒன்றில், எனக்கான காட்சிகளை மாற்றி ரீ ஷூட் செய்தார்கள். அந்தப் படத்தில் என் சட்டை காலரை பிடித்து இழுக்க வேண்டிய ஒரு நடிகர், அதை செய்ய மாட்டேன் என்றார். அப்படி செய்தால் ரசிகர்கள் திட்டுவார்கள் என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.