பாலிவுட்

பிரதமர் பாராட்டிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' - பாலிவுட்டின் அமைதியை கேள்வி எழுப்பும் கங்கனா

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி பாராட்டிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து பாலிவுட் அமைதி காப்பது ஏன் என நடிகை கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார்.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. நேற்று முன்தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து பாலிவுட்டில் நிலவும் அமைதியை கவனியுங்கள். இந்தப் படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு எந்த மலிவான விளம்பரமும் செய்யப்படவில்லை. வசூல் குறித்து எந்தவிதமான போலி எண்களும் வெளியாகவில்லை. மாஃபியா தேச விரோத செயல்திட்டங்கள் இல்லை. ஆனாலும் பாலிவுட் இந்தப் படம் குறித்து அமைதியை கடைபிடிப்பது ஏன் என தெரியவில்லை. நாடு மாறும் போது படங்களும் மாறும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து சந்தித்தார். அப்போது படம் குறித்து பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார். சந்திப்புக்கு பின் பேசிய இயக்குநர் விவேக், "மோடி ஜியின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும்தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT