நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்தது. இதனை முன்னெடுத்தவர் நடிகை கங்கனா ரணாவத்.
வாரிசு நடிகர்களும், அவர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்களுமே சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்று பேசி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு தொடர்ந்து வாரிசு நடிகர்களையும், பாலிவுட் பிரபலங்களை சாடி வந்தார்.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சஞ்சய் தத், ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘சடக் 2’ திரைப்படம் இணையத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக ஆனது.
இந்நிலையில் சஞ்சய் தத்தை சந்தித்ததாக ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் கங்கனா கூறியிருப்பதாவது:
நாங்கள் இருவரும் ஹைதரபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளோம் என்று எனக்குத் தெரியவந்தபோது நான் இன்று காலை சஞ்சு சாரின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றேன். அவர் மிகவும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் நீண்ட ஆயுளுக்காகவும், உடல்நலத்துக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்’
இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.
கங்கனாவின் இந்தப் பதிவுக்கு சஞ்சய் தத் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கங்கனாவின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இத்தனை நாளும் வாரிசு நடிகர்களையும், பாலிவுட் பிரபலங்களையும் கடுமையாக சாடிவிட்டு இப்போது ஒரு வாரிசு நடிகருடன் நட்பு பாராட்டலாமா? என்று கங்கனாவின் பதிவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.