இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக இயக்குநர் ஷேகர் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘மசூம்’ (1983), ‘மிஸ்டர் இந்தியா’ (1987), ‘பேண்டிட் குயின்’ (1994) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஷேகர் கபூர். பூலான் தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘பேண்டிட் குயின்’ சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ‘எலிசெபத்’ (1998), ‘எலிசெபத்: தி கோல்டன் ஏஜ்’ (2008) உள்ளிட்ட சர்வதேசப் படங்களை இயக்கியுள்ளார். இவ்விரண்டு திரைப்படங்களும் சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.
இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சம் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக இயக்குநர் ஷேகர் கபூரை நியமித்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ''இயக்குநர் ஷேகர் கபூர் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பணிக்காலம் 03.03.2020 வரை நீடிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஷேகர் கபூருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.