நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி சுஷாந்த் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சுஷாந்த நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேதர்நாத்’. இப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறையவடைய உள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்தின் இயக்குநர் அபிஷேக் கபூர் சுஷாந்த் உடனான நினைவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அபிஷேக் கபூர் கூறியுள்ளதாவது:
கேதர்நாத் நகரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நாம் நம் கடைசி நடனத்தை ஆடிக் கொண்டிருந்தோம். நாம் இணைந்திருந்த அந்த பிரகாசமான நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன் சகோதரா. உன்னுடைய ரசிகர்களால் நீ எந்த அளவு நேசிக்கப்படுகிறாய் என்பதை நீ அறிந்திருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உன்னை யாரும் நேசிக்கவில்லை என்று சில கெட்ட மனங்கள் உன்னிடம் சொல்லியிருக்க கூடாது என்றும் நான் விரும்புகிறேன்.
உனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உன்னுடைய ரசிகர்கள் போராடுவதை நீ பார்க்க வேண்டும். அவர்கள் உனக்காக உலகையே புரட்டி விட்டார்கள்.
இவ்வாறு அபிஷேக் கூறியுள்ளார்.