ஜூன் மாதம் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே இரங்கல் தெரிவித்தார்கள். சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் வாரிசு நடிகர்களின் பக்கத்திற்கே சென்று நெட்டிசன்கள் பலர் அவர்களை திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் பல நடிகர்கள் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரிசு அரசியலை கணக்கிடும் ‘நெபோமீட்டர்’ செயலியை சுஷாந்த் குடும்பத்தினரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனை சுஷாந்தின் மைத்துனரான விஷால் கிருத்தி சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினார்.
ஆலியா பட் குடும்ப திரைப்படமான ‘சதாக் 2’ திரைப்படத்தில் 98 சதவீத வாரிசு அரசியல் இருப்பதாக நெபோமீட்டர் காட்டியது. இது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தை கிளப்பியது. சுஷாந்த் குடும்பத்தினர் இதனை தங்களின் சொந்த லாபத்துக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றசாட்டையும் சிலர் முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள விஷால் கிருத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நாங்கள் இன்னும் துக்கத்தில் இருக்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வதே இப்போதைக்கு எங்களுக்கு முக்கியம். என் தம்பியின் கண்டுபிடிப்பான நெபோமீட்டரை நான் அறிமுகம் செய்தேன். அது சுஷாந்தின் மறைவுக்கு ஒரு சிறிய அர்ப்பணம். அது லாபத்துக்காக உருவாக்கப்பட்டதல்ல. இது எங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.