பாலிவுட்

நீங்கள் வளரும் இயக்குநரா? - அப்போ, ஷாரூக்கானின் ‘பேய்ப் பட’ போட்டியில கலந்துக்குங்க

பிடிஐ

தன்னுடைய ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘பேடால்’ வெப் சீரிஸை விளம்பரப்படுத்தும் வகையில் நடிகர் ஷாரூக் கான் வளரும் இயக்குநர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் இம்ரான் ஹாஷ்மி நடிப்பில் வெளியான ‘பார்ட் ஆஃப் ப்ளட்’ வெப் சீரிஸுக்குப் பிறகு மீண்டும் ஷாரூக் கான் தயாரிக்கும் இரண்டாவது வெப் சீரிஸ் ‘பேடால்’.

ஜாம்பி வகை ஹாரர் சீரிஸான இதில் வினீத் குமார், அஹானா கும்ரா, சுசித்ரா பிள்ளை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த வெப் சீரிஸ் வரும் மே 24ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘பேடால்’ வெப் சீரிஸை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடிகர் ஷாரூக் கான் வளரும் இயக்குநர்களுக்கு ஒரு பேய்ப்பட போட்டியையும் அதற்கான விதிமுறைகளையும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த ஊரடங்கு காலத்தில் நம் அனைவரிடமும் நேரம் இருப்பதால் நம்மால் வேடிக்கையாக, ஆக்கப்பூர்வமாக, பயமுறுத்தும் வகையில் பணியாற்ற முடியும் என்று நினைத்தேன். நாம் இந்த காலகட்டத்தில் நிறைய படங்கள் பார்த்திருப்போம். நம்முள் இருக்கும் இயக்குநரை ஒரு உள்ளரங்கு பேய்ப் படம் எடுக்கவைத்தால் எப்படி இருக்கும்?

இவ்வாறு ஷாரூக் கான் கூறியுள்ளார்.

இந்த போட்டிக்கான விதிமுறைகளாக அவர் கூறியிருப்பதாவது:

  • கிடைக்கும் எந்த கேமராவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பயமுறுத்த எந்த பொருளையும் பயன்படுத்தலாம். ஆனால் அந்த பொருள் வீட்டில் தயாராக இருக்கவேண்டும்.
  • இது ஒரு தனி நபர் திரைப்படமாக இருக்கவேண்டும் அல்லது சமூக இடைவெளியை பின்பற்றி பலரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • படத்தை மே 18க்குள் அனுப்பவேண்டும்.
  • வெற்றியாளருடன் ஷாரூக் கான், மற்றும் ‘பேடால்’ படக்குழுவினர் வீடியோ காலில் பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT