பாலிவுட்

வெளியே சுற்றினால் ‘மஸக்கலி ரீமிக்ஸ்’ பாடலை கேட்க வைப்போம் - ஜெய்ப்பூர் காவல்துறையின் விநோத எச்சரிக்கை

செய்திப்பிரிவு

2009-ம் ஆண்டு அபிஷேக் பச்சன், சோனம் கபூர், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டெல்லி 6'. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரான் இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், பாடல்கள் ஹிட்டடித்தன. குறிப்பாக 'மஸக்கலி' என்ற பாடல் பெரும் வைரலானது. 'டெல்லி 6' படத்தின் இசை உரிமை டிசீரிய்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

தற்போது 'மர்ஜாவன்' படத்துக்காக 'மஸக்கலி' பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தினர். அந்தப் பாடலின் வீடியோ நேற்று (ஏப்ரல் 8) இணையத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிக்கும்படி இல்லை என்று கடும் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. மேலும், அசல் பாடலின் அழகைக் கெடுக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த ரீமிக்ஸ் பாடலை நேரடியாக இல்லாமல், மறைமுகமாகக் கடுமையாகச் சாடியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் காவல்துறை தனது பங்குக்கு ‘மஸக்கலி 2.0’ பாடலை கலாய்த்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றுபவர்களை எச்சரிக்க நினைத்த ஜெய்ப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதில் ‘தேவையில்லாமல் வெளியே சுற்றினீர்கள் என்றால் உங்களை ஒரு அறையில் அடைத்து ‘மஸக்கலி 2.0’ பாடலை திரும்பத் திரும்ப போடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர் காவல்துறையின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT