உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிட்ட பிரபலங்களைக் கடுமையாகச் சாடி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஃபாரா கான்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 21 நாட்கள் ஊரடங்கு என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். மேலும், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இந்த வீடியோக்கள் தவிர்த்து பலரும் தங்களுடைய வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களைப் பதிவேற்றினார்கள். இந்த ஊரடங்கிலும் தொடர் உடற்பயிற்சி எனப் பலரும் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டனர். இதனை பட இயக்குநரும், நடன இயக்குநருமான ஃபாரா கான் கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் ஃபாரா கான். பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி பிரபலங்கள், நட்சத்திரங்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து நீங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களைத் தொடர்ந்து பதிவேற்றாதீர்கள்.
நீங்களெல்லாம் வசதி படைத்தவர்கள். இந்த சர்வதேசப் பிரச்சினையில் உங்களுக்கு உங்கள் உடலைக் கச்சிதமாக வைத்துக் கொள்வதைத் தவிர வேறெந்த கவலையும் கிடையாது என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், எங்களில் பலருக்கு இந்தப் பிரச்சினையில் பெரிய கவலைகள் இருக்கின்றன.
எனவே நீங்கள் உடற்பயிற்சி வீடியோக்கள் பதிவேற்றுவதை நிறுத்துங்கள். அதை உங்களால் நிறுத்த முடியவில்லை என்றால் நான் உங்களைப் பின் தொடர்வதை நிறுத்திக்கொள்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்”.
இவ்வாறு ஃபாரா கான் தெரிவித்துள்ளார்.