'மைதான்' படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டதற்கான காரணத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
'மஹாநடி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், கீர்த்தி சுரேஷுக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதில் ரொம்பவே தேர்வு செய்து ஒப்புக் கொண்டார். இந்தியில் ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மைதான்’ படமும் அதில் ஒன்று.
இதில் நாயகனாக அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் போனி கபூர் தயாரித்து வருகிறார். தற்போது இந்தப் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
'' 'மைதான்' படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக, ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். இதில் ஒப்பந்தமாகும் போது, அதற்கான உடல்வாகுடன் கீர்த்தி சுரேஷ் இருந்தார். ஆனால், இப்போது அவர் மிகவும் இளைத்துவிட்டார். அவரை வைத்து ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தினோம். தற்போதுள்ள உடல்வாகில் அவரால் ஒரு குழந்தைக்கு அம்மா கதாபாத்திரம் என்பது சாத்தியமில்லை'' எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக ப்ரியா மணி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.
இந்தியக் கால்பந்து அணியின் முதல் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜய் தேவ்கன். சையத் பயிற்சியாளராக இருந்தபோதுதான், 1951 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.