பாலிவுட்

மீண்டும் சல்மான் கான் - பிரபுதேவா இணையும் ராதே

செய்திப்பிரிவு

சல்மான் கான் - பிரபுதேவா இணையும் புதிய படத்துக்கு 'ராதே' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. மேலும், 2020-ம் ஆண்டு பக்ரீத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'பாரத்' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் 'தபங் 3' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சல்மான் கான். சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, 'தபங் 3' படத்துக்குப் பிறகு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. இதனால், சல்மான் கானின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின.

இறுதியாக, மீண்டும் சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது. அதிலும், உடனடியாக படப்பிடிப்புக்குச் செல்லவுள்ளதாகவும் அறிவித்தார்கள். தற்போது அந்தப் படத்துக்கு 'ராதே' எனத் தலைப்பிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்தப் புதிய படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகவுள்ளது. இதன் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்படுகிறது. 'ராதே' படம் அடுத்த ஆண்டு பக்ரீத் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT