மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நடிகர் தர்மேந்திராவுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு (89) சுவாசக் கோளாறு காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை இந்தி நடிகர்கள் சிலர் மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர். பின்னர் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பரவின. அவர் காலமாகிவிட்டதாகவும் சில இந்தி சேனல்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அதை அவருடைய மனைவி ஹேமமாலினி மறுத்தார்.
அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்று அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் பிரதித் சாம்தானி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “தர்மேந்திரா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும். இந்த நேரத்தில் அவர் உடல் நிலை குறித்து வதந்திகளைத் தவிர்த்து, குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்குமாறும் அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.