பிரபல இந்தி நடிகை மவுனி ராய். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ‘நாகினி' தொடரில் நாகினியாக நடித்து புகழ்பெற்றார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவில் தனது ஆரம்பக் காலகட்டத்தில் மோசமான அனுபவத்தைச் சந்தித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “எனக்கு அப்போது 21 வயது. ஒரு படத்துக்கான கதையைக் கேட்பதற்கு ஒருவர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு சிலர் அமர்ந்திருந்தனர். அப்போது ஒருவர் ஒரு காட்சியை விளக்கினார். கதைப்படி, கதாநாயகி நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கி விடுவார். நாயகன் அவருக்கு வாயில் ஊதி சுவாசம் கொடுத்துக் காப்பாற்றுவார்.
இந்தக் காட்சியை விளக்குவதாகக் கூறி, அவர் திடீரென என் முகத்தைப் பிடித்துக் கொண்டு, முகத்துக்கு அருகில் நேராக வந்தார். அவர் செயலைக் கண்டு உறைந்து போனேன். என் உடல் நடுங்கத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். இச்சம்பவம் நீண்டகாலமாக எனக்குப் பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது” என்று தெரிவித்துள்ளார். அவர் இயக்குநரா, நடிகரா, காஸ்டிங் ஏஜென்டா? என்ற விவரத்தை மவுனி ராய் தெரிவிக்கவில்லை.