இந்தியில் ‘ரவுடி ரத்தோர் 2’ உருவாக இருக்கிறது. இன்னும் நாயகன் யார் என்பது மட்டும் முடிவாகவில்லை.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘விக்கரமாக்குடு’ படத்தினை தமிழில் ‘சிறுத்தை’, இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழியிலுமே இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது. பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘ரவுடி ரத்தோர்’ உருவானது.
2012-ம் ஆண்டு 70 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு, சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் ஆனது. இப்படத்தினை பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்திருந்தார். தற்போது அவரது தயாரிப்பிலேயே ‘ரவுடி ரத்தோர் 2’ உருவாக இருக்கிறது. இதற்கான கதைக்களம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டார்கள்.
கன்னடத்தில் ‘கேடி’ என்ற படத்தினை இயக்கி வரும் பிரேம், இப்படத்தினை இயக்கவுள்ளார். ‘கேடி’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ‘ரவுடி ரத்தோர் 2’ பணிகளை அவர் கவனிக்கவுள்ளார். இதில் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.