பாலிவுட்

5 ரூபாய் முதல் 50 லட்சம் வரை... - தபேலா மேதை ஜாகிர் ஹுசைனின் ஈடில்லா இசைப் பயணம்!

செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: கடந்த 1951-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மகாராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் ஜாகிர் ஹுசைன் பிறந்​தார். அவரது தந்தை அல்லா ராக்கா. இவர் பிரபல தபேலா இசைக் கலைஞர் ஆவார். பிறவி மேதையான ஜாகிர் ஹுசைன் 5 வயதிலேயே தபேலா வாசிக்க தொடங்​கினார். தந்தை​யுடன் சேர்ந்து பல்வேறு இசைக்​கச்​சேரி​களில் பங்கேற்​றார்.

தன்னுடைய 11 வயது வயதில் அமெரிக்​கா​வில் தனியாக இசைக் கச்சேரி நடத்​தினார். அப்போது​முதல் அவரது இசை பயணம் தொடங்​கியது. கடந்த 1973-ம் ஆண்டில் ‘லிவ்​விங் இன் தி மெட்​டீரியல் வோர்ல்டு' என்ற பெயரில் தனது முதல் இசை ஆல்பத்தை அவர் வெளி​யிட்​டார். அடுத்​தடுத்து அவரது பல்வேறு இசை ஆல்பங்கள் வெளி​யாகி இசை உலகில் பெரும் வரவேற்பை பெற்​றன.

கடந்த 2009-ம் ஆண்டில் ‘குளோபல் டிரம் புராஜக்ட்' என்ற ஆல்பத்​துக்காக கிராமி விரு​தினை வென்​றார். கடந்த பிப்​ர​வரி​யில் 3 ஆல்பங்​களுக்காக 3 கிராமி விருதுகளை அவர் வென்​றார். கடந்த 1988-ம் ஆண்டில் மத்திய அரசு சார்​பில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. அப்போது ஜாகிர் ஹுசைனுக்கு 37 வயது. மிக இளம் வயதிலேயே அவர் பத்மஸ்ரீ விரு​தினை வென்​றார். கடந்த 2002-ம் ஆண்டில் பத்ம பூஷண், 2023-ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதுகள் அவருக்கு வழங்​கப்​பட்டன.

வானப்​பிரஸ்தம் என்ற மலையாள திரைப்​படத்​துக்கு இசையமைத்து, அந்த திரைப்​படத்​தில் நடித்தும் உள்ளார். இசை துறை​யில் சாதிக்க நினைத்த ஜாகிர் ஹுசைன் தனது 18-வது வயதில் அமெரிக்​கா​வில் குடியேறினார். அங்கு இத்தாலி வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் அந்தோனியோ மினிகோலாவை திரு​மணம் செய்து கொண்​டார். இத் தம்ப​திக்கு அனிஷா (39), இசபெல்லா (37) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

அமெரிக்​கா​வின் சான் பிரான்​சிஸ்கோ நகரில் ஜாகிர் ஹுசைன் குடும்பத்​துடன் வசித்து வந்தார். வயது முதுமை காரணமாக அவருக்கு நுரை​யீரல் தொற்று ஏற்பட்​டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று காலமானார். சான் பிரான்​சிஸ்கோ நகரில் ஜாகிர் ஹுசைனின் உடல் நாளை அடக்கம் செய்​யப்​படும் என்று குடும்பத்​தினர் தெரி​வித்​துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: புகழ்​பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் மறைவை அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்​தேன். இந்திய பாரம்​பரிய இசை உலகில் புரட்​சியை ஏற்படுத்திய உண்மையான மேதையாக அவர் நினை​வு​கூரப்​படு​வார். அவரது குடும்பத்​தினருக்​கும், நண்பர்​களுக்​கும், உலக இசை சமூகத்​தினருக்​கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரி​வித்து கொள்​கிறேன். இவ்​வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறி​யுள்​ளார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சிவ​ராஜ் சிங் சவு​கான் மற்றும் பாலிவுட் பிரபலங்​கள், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான் உள்​ளிட்​டோரும் ஜாகிர் மறைவுக்​கு ஆழ்​ந்த இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

மறக்க முடியாத தாஜ்மகால் தேநீர் விளம்பரம்: கடந்த 1990-களில் ப்ரூக் பாண்ட் தாஜ்மகால் தேநீர் விளம்பரத்தில் ஜாகிர் ஹுசைன் நடித்தார். அவரது மறைவையொட்டி சமூக வலைதளங்களில் அந்த விளம்பரம் தற்போது வைரலாக பரவி வருகிறது. கடந்த 1966-ம் ஆண்டு கொல்கத்தாவில் ப்ருக் பாண்டின் தாஜ்மகால் தேநீர் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் நடிகைகள் ஜீனத் அமன், மாளவிகா திவாரி ஆகியோர் தாஜ்மகால் தேநீர் விளம்பரத்தில் தோன்றினர்.

அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையுமாறு தாஜ் மகால் தேநீரை விளம்பரப்படுத்த புதிய பிரபலத்தை தேநீர் நிறுவனம் தேடியது. பல்வேறு கட்ட தேடுதலுக்குப் பிறகு தபேலா மேதை ஜாகிர் ஹுசைன் தேர்வு செய்யப்பட்டார். அவர் நடிப்பில் வெளியான விளம்பரம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது.

5 ரூபாயில் இருந்து ரூ.50 லட்சம் வரை... சிறுவயதில் ஜாகிர் ஹுசைன் தனது தந்தை அல்லா ராக்காவுடன் இணைந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வந்தார். பண்டிட் ரவிசங்கர், உஸ்தாத் அலி அக்பர் கான், பிஸ்மில்லா கான் உள்ளிட் டோர் பங்கேற்ற ஒரு கச்சேரியில் தந்தையுடன் இணைந்து ஜாகிர் ஹுசைனும் பங்கேற்றார். அந்த இசைக் கச்சேரிக்காக ஜாகிருக்கு ரூ.5 ஊதியம் வழங்கப்பட்டது. இதுதான் அவரது முதல் ஊதியம் ஆகும். அவர் பிரபலம் அடைந்த பிறகு ஓர் இசைக்கச்சேரிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பெற்றார்.

இதுகுறித்து ஜாகிர் ஹுசைன் கூறும்போது, “இப்போது லட்சம், லட்சமாக சம்பாதிக்கிறேன். ஆனால் நான் முதல்முதலாக பெற்ற 5 ரூபாய் ஊதியத்தை என்னால் மறக்கமுடியாது. இதேபோல என்னுடைய முதல் இசைக் கச்சேரிக்கு ரூ.100 கிடைத்தது. அதையும் மறக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.

6 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஜாகிர்: தனது இளமைக்காலம் குறித்து ஜாகிர் ஹுசைன் கூறியதாவது: என்னுடைய 3 வயதிலேயே தபேலா இசையை எனது தந்தை கற்றுக் கொடுத்தார். ஐந்து வயதில் தபேலாவை இசைக்க தொடங்கினேன். இது எனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்த சொல்லி பலமுறை கண்டித்தார்.

எங்கள் வீட்டுக்கு அருகில் புஜாரன் என்ற பாடகி இருந்தார். அவருடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். எனது வீட்டில் இருந்து வெளியேறி அந்த பாடகியின் வீட்டுக்கு சென்றேன். ‘நான் தபேலா இசைக்கிறேன். நீங்கள் பாட்டு பாடுங்கள். இருவரும் சேர்ந்து இசைக்கச்சேரி நடத்தலாம்' என்று கூறினேன். அந்த பாடகி எனது மழலையை ரசித்து வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.

எனது தந்தையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவரை விட்டு பிரிந்து செல்ல எனக்கு மனம் கிடையாது. எனது இளமை பருவத்தில் அந்தோனியோ மினிகோலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இது எனது அம்மாவுக்கு நீண்ட காலம் தெரியாது. ஆனால் அப்பாவுக்கு தெரியும். அவர்தான் எனது அம்மாவிடம் பக்குவமாக எடுத்துரைத்தார். இவ்வாறு ஜாகிர் ஹுசைன் தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT