மும்பை: ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு இருவரும் தங்கள் மகளின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா’ பாலிவுட் படத்தின்போது, ரன்வீர் சிங் - தீபிகா இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 8-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தங்கள் குழந்தையின் பெயரை தம்பதியினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் கால்களின் புகைப்படத்தை பகிர்ந்து, “துவா படுகோனே சிங். ’துவா’ (Dua) என்றால் பிரார்த்தனை என்று பொருள். எங்களின் பிரார்த்தனைக்கு கிடைத்த பதில் எங்கள் மகள். அதனால் தான் இந்தப் பெயரை சூட்டினோம். எங்கள் மனம் முழுவதும் அன்பால் நிறைந்திருக்கிறது” என பதிவிட்டுள்ளனர்.