பாலிவுட்

“சீக்கியர்களை பயங்கரவாதிகளாக காட்டினால்...” - ‘எமர்ஜென்சி’ ரிலீஸை முன்னிட்டு கங்கனாவுக்கு கொலை மிரட்டல்

செய்திப்பிரிவு

மும்பை: கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்திருக்கும் ‘எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸை முன்னிட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படும் வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி'. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்.6 அன்று திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு கங்கனாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் பேசுபவர்கள், “இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்தால் சர்தார்கள் உங்களை காலணியால் அடிப்பார்கள்.

நீங்கள் ஏற்கெனவே அறை வாங்கியிருக்கிறீர்கள். நான் ஒரு பெருமைமிகு இந்தியன். நான் என்னுடைய நாட்டில், குறிப்பாக மகாராஷ்டிராவில் உங்களை எங்காவது பார்த்தால், எங்களுடைய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் உங்களை காலணியால் வரவேற்போம்.

வரலாற்றை மாற்ற முடியாது. படத்தில் சீக்கியர்களை பயங்கரவாதிகளாக காட்டினால், நீங்கள் யாரை பற்றி படம் எடுக்கிறீர்களோ, அவருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்களை நோக்கி கைகாட்டும் விரல்களை எப்படி உடைக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எங்களின் தலைகளை தியாகம் செய்ய முடிந்த எங்களுக்கு, அதை எடுக்கவும் முடியும்” என்று அதில் அவர்கள் பேசுகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, மகாராஷ்டிரா, இமாச்சல், பஞ்சாப் காவல்துறையினரை டேக் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT