சென்னை: "திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுக்கிரகவாசி கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் 4500+VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக 'அயலான்' இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எங்களின் பிரமாண்ட படைப்பான 'அயலான் ' பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளைத் தாண்டி, நாளை ஏப்ரல் 24, காலை 11.04 மணிக்கு 'அயலான் 'அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
'அயலான் ' திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜிஐ (CGI) காட்சிகளுக்கு பெரும் மெனக்கலுடன் பணி புரிந்துள்ளோம். 'அயலான் ' ஒரு பான்-இந்தியன் திரைப்படம். இதற்காக அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது.
திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுக்கிரகவாசி கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் 4500+VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக 'அயலான் ' இருக்கும் என்பதை உங்களுக்கு தெரிவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பறிய பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக 'அயலான் ' இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளைய 'அயலான் ' அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். 'அயலான் ' மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.