கோழிக்கோடு: கேரளா மாநிலத்தை சேர்ந்த 21 வயதான மாடலும், நடிகையுமான சஹானா, அவரது பிறந்தநாள் அன்று உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினருக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சஹானா. மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் நிறைய நகைக்கடை விளம்பரங்களில் நடித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு முன்னர் அவரது கணவர் கத்தாரில் பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் கோழிக்கோடு பகுதியில் உள்ள சஜ்ஜாத் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பின்னர் வாடகை வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளனர்.
நேற்று (மே 12) தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சஹானா. அன்றைய நாள் இரவு 1 மணியளவில் அவர் மூச்சு பேச்சின்றி இருப்பதாக சஹானாவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவரது கணவரை போலீசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக சஹானாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் மகளை புகுந்த வீட்டினரும், கணவரும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்காக கொடுத்த நகைகளையும் சஜ்ஜாத் விற்று விட்டதாக சொல்லப்படுகிறது.
அண்மையில் தமிழ் விளம்பரம் ஒன்றில் சஹானா நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை தொடர்பாக தம்பதிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாத்ரூமில் மயங்கிய நிலையில் சஹானா கண்டெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.