பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து பழங்குடியின இளைஞர்களுக்கு கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை: பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து உடனடி வேலைவாய்ப்பு தரக்கூடிய வகையில் 33 பழங்குடியின இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பழங்குடியின இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்புச் சவால்கள், வெறும் கல்விப் பற்றாக்குறையால் மட்டும் உருவானவை அல்ல. அவர்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள புவியியல் சூழல், போதிய தொழில்முறைத் தொடர்புகள் இல்லாமை மற்றும் பொருளாதாரத் தடைகள் அவர்களை முறையான வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் வைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பழங்குடியினர் நலத் துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதுபோன்ற திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும் முறையான பயிற்சி மையங்களை அணுக முடியாத வசிப்பிட தூரம் காரணமாகவும் பழங்குடியின இளைஞர்களின் பங்கேற்பு பெரிய அளவில் இல்லாத நிலை இருந்து வந்தது.
இந்த இடைவெளியை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு - பயிற்சி - சான்றிதழ் - வேலைவாய்ப்பு என ஒரே கட்டமைப்பில் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக பழங்குடியின குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் சந்தை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு, உடனடி வேலைவாய்ப்பைத் தரக்கூடிய ஓட்டுநர் பயிற்சித் துறை தேர்வு செய்யப்பட்டது.
இதன்படி முதற்கட்டமாக 15 பழங்குடியின இளைஞர்களுக்குக் கனரக வாகனப் பயிற்சியும், 18 பேருக்கு இலகுரக வாகனப் பயிற்சியும் வழங்கப்பட்டன.
பாதுகாப்பான வேலைவாய்ப்பு
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு அனுபவம் பெறும் இளைஞர்கள், அதனைத் தொடர்ந்து கனரக வாகனப் பயிற்சியில் இணைந்து தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படும் முறையான சான்றிதழ்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் அவர்களுக்குப் பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும். குறிப்பாக, இத்துறையில் பழங்குடியினப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளது சிறப்பு அம்சமாகும்.
இப்பயிற்சியானது ஒரு முழுமையான தொழில்முறைப் பயணமாக மாற்றுவதுடன் சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகனப் பராமரிப்பு குறித்த விளக்கங்கள் முதல் நேரடி நடைமுறைப் பயிற்சி, திறன் மதிப்பீடு, சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தருவது வரை அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் வழங்குவதே இத்திட்டத்தின் தனித்துவமாகும்.
இது அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் சமூக மாற்றத்தையும் ஒருசேர உறுதி செய்ய வழிவகுக்கிறது. பழங்குடியின இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் திறன் பயிற்சி, அவர்களைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றும் நிலையான வாழ்வாதாரப் பாதையாகும். திறன் பயிற்சியைக் கடைக்கோடி மனிதர்களுக்கும் கொண்டு செல்லும் வகையிலான அரசின் இத்தகைய முயற்சிகள், சமூகச் சமத்துவத்தை உருவாக்கும் என பழங்குடியின நலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.