சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்-1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தங்கள் அசல் சான்றிதழ்களை மே 8 முதல் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குருப்-1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மே 8 முதல் 16 வரை (அரசு வேலை நாட்களில்) தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
முதன்மைத் தேர்வுக்கான தேர்வுகட்டணம் ரூ.200-ஐ மே 15 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும்.தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே சான்றிதழ்களை பதிவேற்ற முடியும்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று கூறியுள்ளார்.