சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு சென்னையில் இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளன. 5
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 160-க்கும்மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவைதவிர 15 இரு சக்கர அவசர உதவி வாகனங்கள் உள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள 100 அவசரகால மருத்துவ உதவியாளர்கள் (எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன்) பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல்17-ம் தேதி (இன்று) முதல் வரும்19-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. அப்பணியில் சேர பிஎஸ்சி நர்சிங் அல்லது பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல் (மைக்ரோ பயாலஜி), உயிரி வேதியியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி, டி பார்ம், பி பார்ம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை 12-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் படித்திருக்க வேண்டும். 19 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் அப்பணியில் சேரலாம்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு,நேர்முகத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்றுஅதில் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9150084170 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.