திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆயுதப்படை அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 18 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள், சேவை மனப்பான்மை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர் களுக்கு மாதச்சம்பளம் கிடையாது. தொகுப்பூதியமாக ரூ.2 ஆயிரத்து 800 மட்டும் வழங்கப்படும்.
இப்பணியில் சேருபவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கி 45 நாட்களுக்கு பயிற்சி பெற வேண்டும். இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள்காவல் துணை கண்காணிப்பாளர், ஆயுதப்படை வளாகம், திருப்பத்தூர் என்ற முகவரியில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் நாளை (30-ம் தேதி) மாலை 5 மணி வரை மட்டுமே பெற முடியும்.
விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 5 நாட்களுக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.