ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது.
ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில், 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்று, 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதி உள்ளவர்களும் பங்கேற்கலாம்.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன இம்முகாமில், மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 0424-2275860 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.