சென்னை: குரூப்-4 தேர்வில் கூடுதலாக 727 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 4,662 ஆக உயர்ந்தது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெளியானது.
இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக 727 காலி பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அறிவிக்கப்பட்ட மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரித்துள்ளது. கூடுதல் காலி இடங்கள் பெறப்படும் பட்சத்தில், கலந்தாய்வுக்கு முன்பு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.