சென்னை: சென்னையில் உள்ள ராணுவ ஆட்தேர்வு தலைமை அலுவலகம் சார்பில், ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி, அக்னிவீர் பொதுப் பணி, அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், சிப்பாய் பார்மசி, நர்சிங் உதவியாளர், நர்சிங் உதவியாளர் (கால்நடை) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் வரும் பிப்.5 முதல் 15-ம் தேதிவரை இந்த ஆட்கள் தேர்வு நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி உள்ளிட்ட ஆவணங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆவணங்களை பதிவேற்றம் செய்தவர்கள் மட்டுமே இந்த ஆட்தேர்வு முகாமில் பங்கேற்க முடியும். இதுகுறித்து, கூடுதல் விவரங்கள், சந்தேகங்களுக்கு சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள ராணுவ ஆட்தேர்வு தலைமை அலுவலகத்தை நேரிலோ, 044-2567 4924 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.